வலிகாமம் வடக்கு பிரதேச சபை
ஒரு பற்றிய ஒரு வரலாற்றுச் சுருக்கம்
வலிகாமம் வடக்கு பிரதேசசபை 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் 09 ஆவது அட்டவணையின் பிரகாரம் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். 1981 ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபையின் கீழ் இருந்த வலிகாமம் வடக்கிலுள்ள பட்டின சபைகளையும், கிராம சபைகளையும் சேர்த்து உருவாக்கப்பட்டதே வலிகாமம் வடக்கு பிரதேசசபையாகும்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையானது 1960 களில் காங்கேசன்துறை பட்டின சபையாகவும், மயிலிட்டி , தெல்லிப்பளை , மல்லாகம் ஆகியன கிராம சபைகளாகவும் இயங்கி வந்துள்ளன.. 1980 ம் ஆண்டு 35 ம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம் 01.07.1981 தொடக்கம் யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபையின் கீழ் உப அலுவலகங்களாக இருந்த காங்கேசன்துறை, மயிலிட்டி, தெல்லிப்பளை, மல்லாகம், ஆகியன உப அலுவலகங்களாக கொண்டுவரப்பட்டன. பின்னர் 1987 ம் ஆண்டின் 15 ம் இலக்க பிரதேச சபைகள் கட்டளைச் சட்டத்திற்கு இணங்க 1988 ம் ஆண்டிலிருந்து மேற்படி நான்கு உப அலுவலகங்களையும் சேர்த்து வலிகாமம் வடக்கு பிரதேச சபையாக தரமுயர்த்தப்பட்டது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைகள் கீழ்வருமாறு காணப்படுகின்றது.
453/74 ம் இலக்க 12.05.1987 ம் திகதிய அதிவிசேட வர்த்தமானியின் அறிவித்தலுக்கமைய ,
வடக்கு – சேந்தாங் குளம், கீரிமலை, ஊரணி, வீரமாணிக்க தேவன்துறை,
மயிலிட்டி கடற்பரப்பு உள்ளிட்ட பரந்த கடற்பரப்பு
கிழக்கு - வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு.
தெற்கு - வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு
மேற்கு - வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையானது, 1988 இல் முன்னைய உள்ளுராட்சி சபை அமைப்புக்களாகிய காங்கேசன்துறை பட்டினசபை, மயிலிட்டி கிராமசபை, தெல்லிப்பளை கிராமசபை, மல்லாகம் கிராமசபை ஆகிய நிர்வாக அலகுகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்பாகும். இந்த சபையானது துஃ212 தொடக்கம் துஃ256 வரையான 45 கிராம அலுவலர் பிரிவுகளையும் 21 வட்டாரங்களையும் உள்ளடக்கிய பரந்த பிரதேசமாகும். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11106 பதிவு செய்யப்பட்ட ஆதனங்களையும், கௌரவ தவிசாளர் உட்பட 39 தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களையும், 61.25 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும், 45 கிராம அலுவலர் பிரிவுகளையும், உள்ளடக்கிய பிரதேசமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இடப்பெயர்வின் முன்னர் பசுமை நகரமாக அதாவது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களையும் மூலவளங்களாகத் தன்னகத்தே கொண்டு விளங்கிய வலிகாமம் வடக்கு பிரதேசத்தை பாலை நிலமாக மாறவிடாது பசுமை நகரமாகத் திகழ்வதற்கு நிர்வாகமானது பல்வகையாலும் அரும்பாடுபட்டது. அப்பகுதியில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் இடம் பெயர்ந்து பல இன்னல்கள் மத்தியில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் எமது தலைமை அலுவலகம் மற்றும் காங்கேசன்துறை உப அலுவலகம், மயிலிட்டி உப அலுவலகம், காங்கேசன்துறை நூலகம், மயிலிட்டி நூலகம் உட்பட பெரும்பாலான அரச, தனியார் பொது நிறுவனங்கள், பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள் போன்றன தமது சொந்த இடங்களில் இயங்க முடியாது வெவ்வேறு இடங்களில் இயங்கி வந்திருந்தாலும் எமது சபையானது மக்களுக்கான சேவையை சிறப்பாகவே ஆற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். எழில்மிகு நகரங்கள் கொண்டு சனத்தொகை செறிந்த பிரதேசமாக விளங்கிய வலிகாமம் வடக்கு பிரதேசமானது இடம்;பெயர்வின் காரணமாக சமூக, பொருளாதார தாக்கங்களினை எதிர்நோக்கியுள்ளது.
இப் பிரதேசமானது கடந்த காலங்களில் அதிகளவிலான சனத்தொகையைக் கொண்டிருந்த போதிலும் தற்போதைய 2020 ஆம் ஆண்டுக்கான சனத்தொகைக் கணிப்பீட்டின் படி மொத்தச் சனத்தொகை 45076 ஆகும். இவர்களில் 21871 ஆண்கள், 23205 பெண்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது பிரதேசத்தின் பெரும் பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து பகுதியளவிலேயே வடுவிக்கப்பட்டுள்ளது. 45 கிராமசேவையாளர் பிரிவு இருந்தாலும் 22 கிராமசேவையாளர் பிரிவுகள் முழுமையாக குடியமர்த்தப்பட்டும் 19 கிராமசேவையாளர் பிரிவுகள் பகுதியளவில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டும் மிகுதி விடுவிக்கப்படாத பிரதேசமாகவும் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி கலாசார விழுமியங்களைப் பிரதிபலிக்கின்ற இயற்கை அமைவுடன் கூடிய பிரதேசங்களாக காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி துறைமுகம், பலாலி விமான நிலையம், ஐந்து ஈச்சரங்களுள் ஒன்றாக விளங்கும் நகுலேஸ்வரம் ஆலயமும் அத்துடன் அயற்பகுதியில் அமைந்துள்ள கேணியும், பல்லவர் காலக் கட்டடக் கலையின் சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டு விளங்கியவாறு தற்பொழுதும் பழைமைப் பொலிவுடனான கோபுர வாசலுடன் காட்சியளிக்கின்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமும், அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகப் போற்றப்படும் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயமும் சிறப்புடன் அமைந்திருப்பது இப்பிரதேச்த்தை மேலும் மெருகூட்டுவதாகவே உள்ளது.